Monday, March 17, 2008

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும்: மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு


புதுடில்லி:


"மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறியிருப்பதாவது:


மஞ்சளில்,மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,"கர்குமின்' (விதையில் உள்ள ரசாயன பொருள்) எனப்படும் ஒரு கலவை. அதில் ரசாயன சத்து உள்ளது. உணவில் சேர்த்து சாப்பிடும் போது,


மஞ்சளில் உள்ள சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது;


புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது;


ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது;


பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.


மஞ்சளில் உள்ள "கர்குமின்' ரசாயனம், உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.


இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம். அதை இந்த ரசாயனம் தடுக்கிறது.


"ஜீன்'களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை,மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.


எங்களின் முதல் கட்ட சோதனையில், எலிகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.


ஆனால்,மஞ்சளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது.


எந்த அளவு வரை பயன்படுத்தலாம் என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்.


இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.


கனடா நிபுணர்களுக்கு முன்பே, மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து, இதே உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறுகையில்,


"கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது;


இதை நாங்கள் ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம்.


மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டது தெரியவந்தது'


என்று தெரிவித்தனர்.

No comments: